இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது.
ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்களை தொடவில்லை. மோசமான தோல்வி எதிரொலியாக முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆஹா, இமாம் உல்-ஹக் உள்பட 7 வீரர்கள் 3-வது டெஸ்டுக்கு முன்பாக தடாலடியாக நீக்கப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமதுவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கையை முன்னாள் கேப்டன்கள் ரமீஷ் ராஜா, ரஷீத் லத்தீப், சாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் கடுமையாக குறை கூறினர்.
ஒரு தொடரின் பாதியில் வீரர்களை நீக்குவது சரியானது அல்ல. இது வீரர்களின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்று அவர்கள் சாடினர்.
இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் லண்டனில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமான நிலையில் இருப்பதாக விமர்சிப்பது நியாயமற்றது. ஒரு நாள் போட்டி தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடைசி 6 ஒரு நாள் தொடர்களில் 4-ஐ கைப்பற்றியுள்ளது. வெற்றி சதவீதம் 24-ல் இருந்து 73-ஆக உயர்ந்துள்ளது. அப்படி இருந்தும் நமது கிரிக்கெட் அழிந்துவிட்டதா? நான் ஒரு விஷயத்தை உங்களிடம் கேட்கிறேன்.
சமீபத்தில் இந்திய அணி, அயர்லாந்திடம் 20 ஓவர் போட்டியில் தோற்றது. முத்தரப்பு தொடரில் தென்ஆப்பிரிக்க அணி, நமிபியாவிடம் தோல்வி அடைந்தது. அத்துடன் கிரிக்கெட் முடிந்து விட்டதா என்ன? இது போன்ற சில பின்னடைவுகள் ஒட்டுமொத்த அணியின் தரத்தை தீர்மானித்து விடாது.
சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறி வருகிறார்கள். தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் எதையும் சாதிக்காதவர்கள் இப்படி பேசுவது வேடிக்கையானது. சில நேரங்களில் அணித் தேர்வில் தவறு நடப்பது உண்மைதான். அதற்கு நானே பொறுப்பேற்கிறேன்.
தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. வீரர்கள் சோபிக்காதபோது அவர்களை நீக்கிவிட்டு மாற்று வீரர்களை சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை.
ஒரு அணியை 9-ல் இருந்து நம்பர் ஒன் இடத்திற்கு 3 அல்லது 6 மாதங்களில் கொண்டு வருவது சாத்தியமல்ல. அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி யுள்ளது.
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் போன்று டெஸ்ட் வடிவத்திலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.