சிராக் ஷெட்டியை தவிர வேறு ஒரு பார்ட்னருடன் இணைந்து விளையாட விரும்பவில்லை என சாத்விக் சாய்ராஜ் தெரிவித்தார்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சிராக் ஷெட்டியை தவிர வேறு ஒரு பார்ட்னருடன் இணைந்து விளையாட விரும்பவில்லை என சாத்விக் சாய்ராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சாத்விக் சாய்ராஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இருவருக்கும் ஒரே இலக்கு இருப்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்று நான் கருதுகிறேன். அதுவே எல்லாவற்றையும் தெளிவுபடுத்துகிறது.
நாங்கள் வெற்றிபெற மட்டுமே விரும்புகிறோம். சாதிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. இது விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே எண்ணத்தைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் வெவ்வேறு விதமாகச் சிந்திக்கலாம், ஆனால் எங்கள் இலக்கு ஒன்றுதான்.
விஷயங்கள் சரியாகச் செல்லாதபோது இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என்றோ அல்லது வேறொரு இணையுடன் விளையாடலாம் என்றோ நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அத்தகைய விவாதங்களை நாங்கள் ஒருபோதும் மேற்கொண்டதில்லை.
பொதுவாக, ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டால் மற்றவர் வேறொரு இணையுடன் விளையாடச் சென்றுவிடுவார். இது ஒட்டுமொத்த சூழலையும் சீர்குலைத்துவிடும். ஆனால், நானும் சிராகும் இதுபற்றி ஒருபோதும் நினைத்ததே இல்லை.
நாங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம், வெளிப்படையாக இருக்கிறோம், தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம்.
களத்திற்கு வெளியே எங்களுக்கு இடையேயான அந்த நல்லுறவு, களத்தில் எங்கள் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
சாத்விக் சிராக் ஜோடி 10 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.