இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லம் பணியாற்றுகிறார். சமீப காலமாக டெஸ்டில் அவரது பயிற்சி பணி மெச்சும்படி இல்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அத்துடன் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்சும் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்தநிலையில் தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைநிற பந்து போட்டிக்கான அணியின் பயிற்சியாளராக அவர் தொடருவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2027-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணியை தயார்படுத்தும் பணியை புதிய பயிற்சியாளர் கவனிப்பார் எனவும் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆன்டி பிளவர், இங்கிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்ட் டாசன் உள்ளிட்டோர் பெயர் அடிபடுகிறது.
டெஸ்ட் அணியுடனான 4 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வந்தது குறித்து மெக்கல் லம் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக தொடர முடியாமல் போவது மிகுந்த வேதனை அளிக்கிறது. என்றாலும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை மதிக்கிறேன். இனி முழு கவனத்தையும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு அளித்து, அணி முன்னேறி செல்வதற்கு உதவுவேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.