விளையாட்டு

தம்பி மாரியப்பன் பல சாதனைகள் படைக்க துணை நிற்போம்- உதயநிதி ஸ்டாலின்

உயரம் தாண்டுதலில் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.அவருக்கு விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலை மலர்

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார். இதனையடுத்து இன்று மாரியப்பன் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறன் தடகள வீரர் தம்பி, பாரீஸ் #Paralympics2024-ன் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்.

தாயகம் திரும்பியுள்ள அவரை இன்று நேரில் சந்தித்துப் பாராட்டினோம். நினைவுப்பரிசினை வழங்கி அவரின் சாதனையைப் போற்றினோம்.

தம்பி மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்திட நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அவருக்கு என்றும் துணை நிற்கும். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.