விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் ஸ்டம்ப் பெயில்ஸை தட்டிவிட்ட பாண்டியா - அபராதம் விதித்த பிசிசிஐ

கொல்கத்தாவில் நடந்த போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக பாண்டியாவிற்கு சம்பளத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் விதிகளை மீறிய குற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், 10வது ஓவரில் கே.கே.ஆர் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

அப்போது மைதானத்தில் நடந்து வந்த பாண்டியா, அங்கிருந்த ஸ்டம்பின் பெயில்ஸை பலமாக தட்டிவிட்டார்.

இதையடுத்து ஒரு போட்டியின்போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதி பிரிவு 2.2ன் கீழ் பாண்டியாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பாண்டியாவின் போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.