29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் 100 மீட்டர் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையையும் குரிந்தர்வீர் சிங் படைத்துள்ளார். மேலும், 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தினார்.
இந்நிலையில், 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த குரிந்தர்வீர் சிங்கிற்கு பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்த சாதனை மூலம் பஞ்சாப்புக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார்.