பிபா தொடர்புடைய நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஜியானி இன்ஃபான்டினோக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதாக வேல்ஸ் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) உலகின் மிகப்பெரிய விளையாட்டு கூட்டமைப்பாக திகழந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இதன் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்குப் பதிலாக புதிய தலைவராக ஜியானி இன்ஃபான்டினோ பொறுப்பேற்றார். 2019 மற்றும் 2023-ம் ஆண்டு போட்டியின்றி மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.
அடுத்த ஆண்டு மொராக்கோவில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பிஃபா தலைவராக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் வேல்ஸ் அவருக்கான ஆதவை திரும்பப் பெற்றுள்ளது.
ஆண்கள் உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளின் வணிக உரிமைகளைக் கண்காணிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் சுமார் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பிஃபா முன்மொழிந்திருந்தது. தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 4.2 பில்லியன் டாலர் வரை திரட்ட முடியும் என்று பிஃபா நம்பியது. முக்கிய பிராந்திய கூட்டமைப்புகள் உள்ளிட்ட கால்பந்து பங்குதாரர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்த 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டம் தோல்வியடைந்து, தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் சார்ந்த நெருக்கடியை உருவாக்கியதைத் தொடர்ந்து, ஜியானி இன்ஃபான்டினோவின் பிஃபா மறுதேர்தல் முயற்சிக்கு வேல்ஸ் தனது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது.
பிபா தனது முக்கிய போட்டிகள் தொடர்பான வணிக உரிமைகளின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கான பிஃபாவின் திட்டம் தோல்வியடைந்ததால், அவரது தலைமைத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகம், தலைமைத்துவம், பங்குதாரர் மேலாண்மை மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்விகளைக் காரணம் காட்டி, 2027-–2031 காலத்திற்கான இன்ஃபான்டினோவின் வேட்புமனுவை இனி ஆதரிக்கப்போவதில்லை என்று வேல்ஸ் கால்பந்து சங்கம் திங்களன்று அறிவித்தது.
வேல்ஸ் கால்பந்து சங்கம் தனது முழுமையான அறிக்கையில் "2027–-2031 காலத்திற்கான பிஃபா தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஜியானி இன்ஃபான்டினோவின் வேட்புமனுவுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வதை வேல்ஸ் கால்பந்து சங்கம் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது.
நல்ல நிர்வாகம், செயல்முறைகள், தலைமைத்துவம், பங்குதாரர் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள தோல்விகள், உலக கால்பந்தின் தலைமைப் பொறுப்பில் நீடிக்க இன்ஃபான்டினோ மீதான நம்பிக்கையை வேல்ஸ் கால்பந்து சங்கம் இழக்கும் நிலைக்கு எங்களை இட்டுச் சென்றுள்ளன. கால்பந்தின் நலன்களுக்கு முதலிடம் அளிக்கத் தவறியது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.