பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் (34), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சுமார் 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு நெய்மர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சான்டோஸ் கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு நெய்மர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசிய அணியுடனான எனது பயணம் முடிந்துவிட்டது. நான் சரித்திரம் படைத்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அணிக்காக என் ரத்தத்தையும், வாழ்க்கையையும் அர்ப்பணித்தேன். இனி பிரேசில் அணிக்காக விளையாட விரும்பவில்லை என தெரிவித்தார்.
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி ரவுண்டு 16 சுற்றிலேயே வெளியேறியது. உலகக் கோப்பை தோல்வி எதிரொலியால் நெய்மர் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரேசில் அணியின் முக்கிய நட்சத்திரமாக நீண்ட காலம் விளங்கிய நெய்மரின் ஓய்வு அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியது.
கடந்த 2010-ம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், தனது 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்து, அந்நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
2013-ல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு கேப்டனாக இருந்து தங்கப் பதக்கத்தையும் வென்று தந்துள்ளார்.
காயங்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு எனப் பல சவால்களைச் சந்தித்த போதிலும், ஒரு தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்து முகமாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.