ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடந்தாண்டு கோப்பையை கைப்பற்றியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு அணி நிர்வாகம் இணைந்து வெற்றிவிழா ஒன்றை ஜூன் மாதம் நடத்தியது.
இந்த விழாவின் முன்னேற்பாடுகள் சரியாக இல்லாதது, மேலும் அதிகளவிலான ரசிகர்கள் கூடியது போன்ற காரணங்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதனையொட்டி இறந்த ரசிகர்கள் நினைவாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகளை நிரந்தரமாக காலியாக வைக்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இறந்தவர்கள் நினைவாக இந்த சீசனில் நடைபெறும் அனைத்து பயிற்சிகளின்போதும், வீரர்கள் 11-ஆம் எண் கொண்ட ஜெர்சியையே அணிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டுக்கான தொடருக்கான முதல்போட்டி மார்ச் 28ஆம் தேதி, ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.