2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று 40வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் ஆடை மாற்றும் அறையில் இ-சிகரெட் புகைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2019 முதல் இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகளுக்கு (E-cigarettes) தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் சேமிப்பு என அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிகோடின் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தத் தடை பொருந்தும்.
விதிகளை மீறுபவர்களுக்கு முதல் முறை குற்றத்திற்கு 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரியான் பராக்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பலதரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்துவருகின்றன. பிசிசிஐ தரப்பிலிருந்தும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து தனியார் ஊடகம் ஒன்று பிசிசிஐ அதிகாரியை ஒருவரை தொடர்புகொண்டு இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு பதிலளித்த பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு பராக்கிடம் விளக்கம் கோரப்படும் என்றும், அவரது விளக்கத்தைப் பொறுத்து, ஐபிஎல் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ-யைத் தாண்டி அரசு தரப்பிலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.