இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரண்டாவது போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மன்களான சுப்மன் கில் மற்றும் டிஷப் பண்ட் தங்களின் அரை சதத்தை பதிவு செய்தனர். பின்னர் தொடர்ந்து ஆடிய தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜூரல் தங்களின் சதத்தை பதிவு செய்தனர்.
இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின்னர் தொடர்ந்து விளையாடிய பசிந்து சூரியபந்தாரா 80 ரன்களும், சோனல் தினுஷா 103 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் சார்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மனவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளும், சரன்ஷ் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.