இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா- 3ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 143 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 169 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் சேர்த்தார். காப் 33 பந்தில் 42 ரன்களும், ட்ரைசன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 33 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஷோபி எக்லெஸ்டோன் 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 320 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.