இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வி.வி.எஸ். லக்ஷ்மண். இவர் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தின் தலைவராக உள்ளார். இளம் வீரர்களை கண்டறிந்து இந்த மையத்தில் சிறப்பான பயிற்சி அளிப்பது, இந்திய கிரிக்கெட் அணியில் காயம் அடைந்து சிகிச்சைப் பின் இங்கு வந்து விளையாட்டுக்கான தகுதி பெறுவதற்கான பயிற்சி மேற்கொள்வது (Rehabilitation-உடல் மீட்பு பயிற்சி) போன்ற பணிகளை வி.வி.எஸ். லக்ஷ்மண் மேற்பார்வையிடும் தலைவராக உள்ளார்.
இவருடைய பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், பி.சி.சி.ஐ. இரண்டு வருடம் லக்ஷ்மண் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முறை பி.சி.சி.ஐ. கிரிக்கெட் இயக்குநர் என்ற பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவியின் கீழ், இவர் ஏற்கனவே செய்து கொண்டு வரும் பணி அப்படியே தொடருவார். மேலும், ஸ்டாஃப் நியமனம் போன்ற பணிகளையும் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் உள்ளார். இவரது பதவிக்காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், 2027-ம் ஆண்டு ஆப்பிரிக்கா கண்டத்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெறுவது தொடர்பான விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால அகர்கர் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது தெரியவில்லை.
கவுதம் கம்பீர் மூன்ற வகை சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி விலகிய பிறகு இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. இதனால் டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக தொடர்ந்து நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இலங்கை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கவுதம் கம்பீர் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தொடருக்கு முன்னதாக பும்ரா, சாய் சுதர்சன், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பும்ரா, சாய் சுதர்சன் இலங்கை தொடரில் இருந்து வெளியேறினர். இதனால் சிறப்பு மையம், வீரர்களுக்கு காயம் குணம் அடைவதற்கு முன்னதாக விளையாட தகுதி என சான்றிதழ் வழங்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.