நமீபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணகள் களமிறங்கின. இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக்கில் உள்ள மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ரன்களும், கானர் 23 பந்துகளில் 32 ரன்களும் சேர்க்க டிவால்ட் பிரெவிஸ் 23 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.
ஜோர்டானின் சகோதரரான ரூபின் ஹார்மன் 16 பந்துகளில் 27 ரன்களும், டுவேன் ஜான்சன் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எட்டியது. இதனால் ஜிம்பாப்வே 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
சற்றே கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரியன் பென்னெட் 6 ரன்களுக்கும், இவருடன் களமிறங்கிய பென் கர்ரன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய இன்னோசன்ட் கயா 9 ரன்களை எடுக்க, இவருடன் ஆடிய வெஸ்லி 6 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் சிக்கந்தர் ராஸா 16 ரன்கள், ரியான் புல் 13 ரன்கள், தடிவான்ஷி 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், பிராட் எவான்ஸ் களமிறங்கினார். கடின இலக்கை துரத்தும் நிலையில், தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இவர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.
இவர் 31 பந்துகளில் 56 ரனகளை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜிம்பாப்வே அணி 18 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, முத்தரப்பு டி20 தொடரின் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.