10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற 11-ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
மதுரை அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராம் குமார் - சித்தார்த் மகாதேவன் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்க வீரரான ராம் குமார் 19 பந்துகளில் 36 ரன்களை (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தனர். இவருடன் களமிறங்கிய சித்தார்த் மகாதேவன் 42 பந்துகளில் 60 ரன்களை (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சதுர்வேத் 5 ரன்களும், கேப்டன் பால்சந்தர் அனிருத் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இது தவிர அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆர் கவின் 22 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய சன்னி சந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் 20 ரன்களிலும், கேப்டன் எஸ் அபிஷேக் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சேலம் அணி ஸ்பார்ட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது.
இதனால் மதுரை பேந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சேலம் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தீபேஷ் தேவந்திரன் 3 விக்கெட்டுகளையும், ரோஹன் புத்ரா மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன் மற்றும் ஷோயப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.