தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.
முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கின்றன.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வாசீம் அகமது 16 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஜெகதீசன்-ஆஷிக் ஜோடி 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய ஆஷிக் அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்துள்ளது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.