ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் அடித்து அவுட்டானார்.
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மருமானி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.
இந்த ஜோடி 23 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் அவுட்டானார்.
மறுபுறம் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அவுட்டானார்.
இதன்மூலம் குறைந்த வயதில் முதல் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இவருக்கு முன், சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாள்களில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.