சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சில நாட்களிலேயே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் காயத்திலிருந்து இன்னும் மீண்டு வராததால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்துள்ளது.