துலீப் டிராபி போட்டியில் வடக்கு மண்டல அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தெற்கு மண்டலம் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
துலீப் டிராபி அரையிறுதி ஒன்றில் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின்
கம்ரான் இக்பால் 76 ரன்னும், கண்ணையா வதாவன் 35 ரன்னும் எடுத்தனர்.
தெற்கு மண்டலம் சார்பில் கவரப்பா 4 விக்கெட்டும், நிதிஷ், தியாகராஜன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் திலக் வர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 117 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் கோபால் 87 ரன்னில் அவுட்டானார்.
வடக்கு மண்டல அணி சார்பில் குர்னூர் பிரார் 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 297 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சனத் சங்க்வான் 76 ரன்னும், ஆயுஷ் டொசேஜா 52 ரன்னும், அன்ஷுல் கம்போஜ் 36 ரன்னும், நிஷாந்த் சிந்து 35 ரன்னும் எடுத்தனர்.
தெற்கு மண்டல அணி சார்பில் நிதீஷ் 5 விக்கெட்டும், சாய் தேஜா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தெற்கு மண்டல அணி களமிறங்கியது. ரிக்கி புய், ஜெகதீசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கி புய் 42 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஜெகதீசன் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரை சதமடித்து 51 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
அவருக்கு ஸ்மாரன் ரவிசந்திரன் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இறுதியில், தெற்கு மண்டல அணி 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன.