கிரிக்கெட்

கங்குலி பயோபிக்கில் நடிக்கும் ரன்பீர் கபூர்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார்.கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை இந்தப் படம் கூறவிருக்கிறது.

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவரை தாதா என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார். இதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம் ஆகும். இந்திய கிரிக்கெட் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி.

இவர் 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர். 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார்.

தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

இந்த நிலையில், கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார். சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT