கிரிக்கெட்

இலங்கை உடனான 2வது டெஸ்ட்: இந்தியாவை அச்சுறுத்திய சோனல் தினுஷா

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இலங்கை வீரர் சோனல் தினுஷா முட்டுக்கட்டையாக இருந்தார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 15-ம் தேதி நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி ரன் குவிப்பு

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்117 ரன்னில் வெளியேறினார். துருவ் ஜூரல் அபாரமாக ஆடி சதமடித்துஅசத்தினார். அவர் 115 ரன்னில் வெளியேறினார்.

ரிஷப் பண்ட் 63 ரன்னும், சுப்மன் கில் 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்னிலும், ஜடேஜா 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா, கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சோனல் தினுஷா சதம்

இதையடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சோனல் தினுஷா ஓரளவு தாக்குப் பிடித்து சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். பசிந்து சூர்யபந்தாரா அரை சதம் கடந்து 80 ரன்னில் வெளியேறினார்.

இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் தலா 3 விக்கெட்டும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இலங்கை அணி பாலோ ஆன் பெற்றது.

தொடர்ந்து, இலங்கை அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது. நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட் வீழ்த்தினார். இன்னும் ஒரு நாள் மீதமுள்ளது என்பதால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தூணாக நின்ற சோனல் தினுஷா

இந்நிலையில், கடைசி நாளான இன்று இலங்கையின் சோனல் தினுஷா காலை முதலே பொறுப்புடன் ஆடினார். அவர் சதமடித்து இலங்கை அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

கேஷரா நுவந்தா 45 ரன்னில் அவுட்டானார். 7வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா- கேஷரா நுவந்தா ஜோடி 112 ரன்கள் சேர்த்தது.

9வது விக்கெட்டுக்கு இணைந்த சோனல் தினுஷா-லஹிரு குமாரா ஜோடி நிதானமாக ஆடி 47 ரன்களை எடுத்தது.

இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 400 ரன்களைக் கடந்துள்ளது.

இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு, சோனல் தினுஷா தூணாக நின்று இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.