கிரிக்கெட்

2027 உலகக் கோப்பை மிக முக்கியமான இலக்கு- சுப்மன் கில்

Gajendra Perumal

2027 உலகக் கோப்பை எங்களின் முக்கியமான இலக்கு என்று சுப்மன்கில் கூறினார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 2026-ம் ஆண்டுக்கான நமன் விருதுகள் நேற்று வழங்கப்பட்டது.

2024-25 காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவா்கள் 2026-ம் ஆண்டு விருதுப் பட்டியலில் இடம் பிடித்தனா்.

சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகா் விருது இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவா் இந்த விருதை 2-வது முறையாக கைப்பற்றினார்.

சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனா 5-வது தடவையாக வென்றார். அப்போது 2027 உலகக் கோப்பை எங்களின் முக்கியமான இலக்கு என்று சுப்மன்கில் கூறினார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

கடந்த முறை இந்தியாவில் கோப்பைக்கு மிக நெருக்கமாக இருந்தோம். தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு சிறந்த சூழ்நிலை. எந்தவொரு வடிவத்திலும் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் எங்களின் இறுதி இலக்கு. இந்த எண்ணம் எப்போதும் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது

இவ்வாறு சுப்மன்கில் தெரிவித்தார்.

2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று அசத்தியது. ஆனால் அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது.

2027-ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நம்பியா ஆகியவற்றில் நடக்கிறது. இதில் 14 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. 2011-ம் ஆண்டு தோனி 2-வது தடவையாக உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2027-ல் 3-வது உலகக் கோப்பையை வெல்வதை சுப்மன்கில் இலக்காக கொண்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் 3-வது தடவையாக 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.