இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2ஆவது டெஸ்ட் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 194 ரன்களில் சுருண்டது. சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடித்தார்.
பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. குர்னூர் பிரார், மனாவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 411 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது, சாய் சுதர்சன் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சாய் சுதர்சனுடன் இணைந்து கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கே.எல். ராகுல் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ அணி 91.3 ஓவரில் 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.