பிசிசிஐ நமன் விருதுகள் 2026 விழாவின் போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், தனது அறிமுக ஐபிஎல் சீசனின் போது செய்த ஒரு குறும்புத்தனம் குறித்து இந்திய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்துள்ளார்.
அதன்படி 2015-ல் பாண்டிங் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, பாண்ட்யா எம்ஐ அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 21 வயதே ஆன பாண்ட்யா, தனது அதிரடியான பினிஷிங்கால் அனைவரையும் கவர்ந்தார்.
அறிமுகமான அந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டிக்கு பரிசுத் தொகைகள் எப்படிப் பகிரப்படும் என்று தெரியவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட பாண்டிங், ஹர்திக்கிடம் ஒரு பொய்யைக் கூறினார்.
போட்டியில் 'ஆட்டநாயகன்' அல்லது பிற தனிநபர் விருதுகளுக்கான முழுத்தொகையும் அவருக்கே சேரும் என்று பாண்ட்யாவை பாண்டிங் நம்ப வைத்தார்.
அப்போது 21 வயதே நிரம்பியிருந்த ஹர்திக், அந்தப் பெரிய தொகையை வைத்து என்னென்ன வாங்கலாம் என்று ஏற்கனவே மனதிற்குள் கணக்கு போடத் தொடங்கிவிட்டார்.
பொதுவாக ஐபிஎல் தொடரில் தனிநபர் பெறும் பரிசுத் தொகை, அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும். இந்த உண்மை தெரிந்ததும் அதிர்ச்சியடைந்ததாக பாண்ட்யா கூறினார்.
பாண்டியா தனது அறிமுக சீசனில் எட்டு இன்னிங்ஸ்களில் 180.64 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் 112 ரன்கள் எடுத்தார். மேலும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.