பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் கடந்த சில காலமாகவே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
எல்லையில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கூறினாலும் இதில் அப்பாவி பொதுமக்கள் தான் உயிரிழப்பதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்
இந்த தாக்குதலில் தலைநகர் காபுலில் உள்ள 2000 படுக்கை வசதி கொண்ட ஓமித் மறுவாழ்வு மருத்துவமனை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என தாலிபான் அரசு குற்றச்சாட்டும் நிலையில், தீவிரவாத செயல்பாடுகள் நடக்கும் இடங்களையே தாக்கியதாகவும் மருத்துவமனைகளை தாக்கவில்லை எனவும் பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காபுலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டோ அல்லது தவறுதலாகவோ இலக்கு வைப்பது ஒரு போர்க்குற்றமாகும். குறிப்பாக புனிதமான ரமலான் மாதத்தில், மனித உயிர்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம்
அருவருப்பானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. இது பிரிவினையையும் வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும். இந்தக் கொடூரமான செயலை முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் துணையாக நிற்கிறேன். நாம் இந்த காயங்களிலிருந்து குணமடைந்து, ஒரு தேசமாக மீண்டும் எழுவோம். இன்ஷா அல்லாஹ்" என்று தெரிவித்துள்ளார்.