பகர் சமான்  
கிரிக்கெட்

ருத்ர தாண்டவமாடிய பகர் சமான் - 2வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அபார வெற்றி

முதலில் ஆடிய நியூசிலாந்து 336 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 337 ரன்கள் எடுத்து வென்றது.

ராவல்பிண்டி:

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 129 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் சாட் பவுஸ் அரை சதமடித்து 51 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் லாதம் 98 ரன்னில் வெளியேறினார்.

பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் கடந்த ஆட்டத்தைப் போலவே சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் 65 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பாகிஸ்தான் 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.