கிரிக்கெட்

டி20 போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது: விராட் கோலி சாதனையை தகர்த்த சூர்யகுமார்

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அமெரிக்கா 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மாலை மலர்

மும்பை:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.

மும்பையில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி 84 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 10 பவுண்டரியும் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சூர்யகுமாருக்கு அளிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்தியாவில் டி20 போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் நேற்று முறியடித்தார்.

இவர் மொத்தம் 17 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 16 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.