கிரிக்கெட்

கால்பந்து போட்டியை பார்க்க Plan போட்டு, உலகக் கோப்பையில் விளையாடும் முகமது சிராஜ்

சிராஜ் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். மாட்ரிட் புறப்பட இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முதலில் டி20 உலகக்கோப்பையில் சிராஜ் இடம்பெறவில்லை. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்ஷித் ராணா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பிடித்தார். கடைசி நேரத்தில் அணியில் இடம்பிடித்த முகமது சிராஜ் முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

இதுகுறித்து நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய முகமது சிராஜ், கடைசி நிமிடத்தில் தான் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னை தொடர்பு கொண்டு உடனே கிளம்பி வரச் சொன்னதாக தெரிவித்தார். இந்த நிலையில், முகமது சிராஜ் அடுத்த வாரம் மாட்ரிட் புறப்பட இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

மாட்ரிட் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் லாலிகா போட்டியை நேரில் காண முகமது சிராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடித்த ஹர்ஷித் ராணா காயமடைந்தார், அணியில் உள்ள பும்ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கடைசி கட்டத்தில் முகமது சிராஜூக்கு அணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட முகமது சிராஜ் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் எடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ரியல் மாட்ரிட் போட்டியை பார்க்க திட்டமிட்ட ஒருவர், சொந்த ஊரில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது கடவுளின் திட்டம் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.