கிரிக்கெட்

இது தொடக்கம் தான்.. LPL 2024-இல் அதிக விலைக்கு ஏலம் போன மதீஷா பதிரனா

இவருக்கான ஏல தொகை கிடுகிடுவென உயர்ந்தது. அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்று சாதனை.

மாலை மலர்

இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கை பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (மே 21) நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான மதீஷா பதிரனா அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

2024 எல்.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மதீஷா பதிரனா 50 ஆயிரம் டாலர்கள் எனும் ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டார். இவரை வாங்குவதற்கு பல அணிகள் போட்டியிட்டன. இதன் காரணமாக இவருக்கான ஏல தொகை கிடுகிடுவென உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் கொலம்போ ஸ்டிரைக்கர்ஸ் அணி மதீஷா பதிரனாவை 1 லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 99 லட்சத்து 96 ஆயிரத்து 900 விலைக்கு தனது அணியில் எடுத்தது. அந்த வகையில், எல்.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மதீஷா பதிரனா படைத்துள்ளார்.