கிரிக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றியின் விளம்பில் இந்திய மகளிர் அணி

முதல் இன்னிங்சில் இந்திய அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய மகளிர் அணி வெற்றியை நெருங்கியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்த நிலையில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு 457 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.

முதல் இன்னிங்ஸ்:

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய ஒற்றை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதில் சிறப்பாக ஆடிய மந்தனா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 58 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 57 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லாரன் பைலர், ஈசி வோங் மற்றும் மேடி வில்லியர்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தியா அபாரம்:

அடுத்து ஆடிய இங்கிலாந்து, தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்திருந்தது. இதில் ஸ்மிருதி மந்தனா (69), யஸ்திகா (39) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

3-ஆம் நாளில் ஸ்மிருதி மந்தனா (70) அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3) வெளியேறினார். தொடர்ந்து ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (16), தீப்தி சர்மா (10) எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய யஸ்திகா சதம் விளாசினார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன்களை எடுத்த போது டிக்ளேர் செய்து 456 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் ரிச்சா கோஷ் (50), சயாலி (18) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

சாதனை வாய்ப்பு:

இதைத் தொடர்ந்து 457 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெறும் 130 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற இன்னும் 327 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த அணியின் கைவசம் 4 விக்கெட் மட்டுமே இருக்கிறது. இதனால் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் சூழல் பிரகாசமாகியுள்ளது.