துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனை தொடர்ந்து ஆரோன் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி 171 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்னில் தனது முதல் இரட்டை சதத்தை அவர் தவறவிட்டார். இதில் 9பவுண்டரிகள், 14 சிக்சர்கள் அடங்கும். இதுவரை இந்திய அணி 32.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.