ராதாரவி- கமல்ஹாசன் 
ஐ.பி.எல்.(IPL)

வாழ்க்கையில் ஆட்டோவில் ஏறாதவர் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார்- கமல்ஹாசன் மீது ராதாரவி தாக்கு

வானதி சீனிவாசன் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக தி.மு.கவின் பி டீமாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார் என்று ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனை பற்றி என்னைவிட யாருக்கும் அதிகமாக தெரியாது. இங்கே நல்லவர் மாதிரி நடித்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு நேர்மையற்றவர். வானதி சீனிவாசன் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக தி.மு.கவின் பி டீமாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார்.

வாழ்க்கையில் ஒருமுறை கூட ஆட்டோவில் ஏறாத கமல்ஹாசன் கோவையில் தான் ஆட்டோவிலேயே ஏறியுள்ளார். இது ஓட்டுக்காக அவர் போடும் நாடகம்.

இளைஞர்கள், தாய் மார்கள் தயவு செய்து அவரை நம்பி ஏமாற வேண்டாம். யாருக்குமே நிரந்தரமில்லாத வாழ்க்கையை ஏற்படுத்தி தந்தவர் தான் கமல்.

சென்னையில் நாங்கள் இருக்கிறோம் என்ற காரணத்தினால் தான் அவர் கோவையில் வந்து போட்டியிடுகிறார். அவருடன் சின்ன வயதில் இருந்து பழகி வருகிறேன். அவர் ஒரு சோம்பேறி. அவர் தன்னை புரட்சித் தலைவர் என நினைத்து கொண்டிருக்கிறார். ஒருபோதும் அவரால் எம்.ஜி.ஆர் போல் ஆக முடியாது. எனவே மக்கள் கமல்ஹாசனை ஆதரிக்க வேண்டாம்.

கம்யூனிஸ்டுகள் ரூ.27 கோடி பணம் பெற்று கொண்டு தி.மு.க கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதி வைத்து, அதை பார்த்து படிப்பவர் தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். வருகிற தேர்தலில் தி.மு.க நிச்சயம் தோல்வி அடையும். முஸ்லிம்களின் நண்பனாக தன்னை காட்டி கொள்ளும் தி.மு.க உண்மையில் அவர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. அதன் மூலமாக இந்தியாவில் இருக்கும் வேற்று நாட்டவரை கண்டறிய முடியும். இது போன்ற பல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.