ஐ.பி.எல்.

IPL 2026: பேட்ஸ்மேன்கள் அதிரடி - இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்த பஞ்சாப்

முதலில் ஆடிய டெல்லி 264 ரன்கள் குவித்தது.

ஐ.பி.எல்.தொடரின் 35-வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா, கே.எல்.ராகுல் ஜோடி 28 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து கே.எல்.ராகுலுடன் நிதிஷ் ராணா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது.

பொறுப்புடன் விளையாடிய கே எல் ராகுல் 47 பந்தில் சதமடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு 220 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 91 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 264 ரன்களைக் குவித்தது. கே.எல்.ராகுல் 152 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் சூறாவளியாய் சுழன்றடித்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் 26 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்தார்.

அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் நிலைத்து ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 71 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதன்மூலம் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் 13 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது.