ஐ.பி.எல்.

IPL 2026 | கிளாசன், நிதிஷ்குமார் அபாரம்: லக்னோ வெற்றிபெற 157 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து திணறியது.

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

ஐதராபாத் ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அபிஷேக் சர்மா டக் அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 7 ரன்னிலும், இஷான் கிஷன் ஒரு ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து திணறியது.

அடுத்து கிளாசனுடன் நிதிஷ்குமார் ரெட்டி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. இதனால் அந்த அணியின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ்குமார் ரெட்டி 56 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ சார்பில் ஷமி, ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டும், திக்வேஷ் சிங் ரதி, மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.