ஐ.பி.எல்.(IPL)

என்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சதம் அடித்து, தனக்கெதிரான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். #IPL2018 #KXIP

மாலை மலர்

ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தின்போது கிறிஸ் கெய்லை எடுக்க ஆர்வம் குறைவாக இருந்தது. இரண்டு முறை அவரது பெயரை அறிவித்தபோதும் யாரும் ஏலம் கேட்கவில்லை. இதற்கு முன்பு அவர் விளையாடிய பெங்களூர் அணியும் கழற்றி விட்டது. 3-வது முறையாக ஏலம் விட்டபோது பஞ்சாப் அணி நிர்வாகம் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரை ஏலம் எடுப்பதற்கு பஞ்சாப் அணி பயிற்சியாளர் ஷேவாக்தான் முக்கிய காரணம். கிறிஸ் கெயல் வயது மற்றும் உடற்தகுதி குறித்து விமர்சனம் எழும்பியது. அப்போது கிறிஸ் கெய்ல் இரண்டு போட்டிகளில் எங்களுக்கு வெற்றியை தேடித்தந்தாலே, அவருக்கு கொடுத்த 2 கோடி ரூபாய்க்கு சமமானது என சேவாக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆட்டநாயகர் விருது பெற்ற கிறிஸ்கெய்ல் கூறும்போது, ‘‘நான் எப்போதுமே ஒரு உறுதியுடன் விளையாடுவேன். உலகில் எங்கு விளையாடினாலும், எந்த அணியில் விளையாடினாலும் அதிரடியாகவே விளையாட வேண்டும் என்ற முடிவில்தான் இருப்பேன். நிறைய பேர் கிறிஸ் கெய்ல் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இந்த மைதானத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. காலம், நேரம் யாருக்காகவும் காத்து கொண்டு இருக்காது. நான் யாருக்காகவும் நிரூபிக்க இங்கு வரவில்லை. கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

என்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டை ஷேவாக் காப்பாற்றி உள்ளார் என்றார். நான் இன்னொரு வார்த்தை சேவாக்கிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். அதில் இருந்து என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்’’ என்றார்.

வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘‘கிறிஸ் கெய்ல் பேட்டிங் அருமையாக இருந்தது. அவரது ஆட்டம் வெற்றியை எங்கள் பக்கம் திருப்பியது. இது ஒரு முழுமையான வெற்றி. நாங்கள் இன்னும் கூடுதலாக 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருந்தபோதிலும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.