அதன்படி டெல்லி அணியின் கொலின் முன்றோ, கவுதம் காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முன்றோ 4 ரன்னில் ஆட்டமிழக்க, கவுதம் காம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (11), விஜய் சங்கர் (13) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
அடுத்து வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 13 ரன்னில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த காம்பீர் 42 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த கிறிஸ் மோரிஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 27 ரன்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
பின்னர் 167 ரன்னகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 14 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 2.5 ஓவரில் 50 ரன்னைத்தொட்டது.
அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 16 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய அகர்வால் 5 பந்தில் 1 சிக்சருடன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த யுவராஜ் சிங் 22 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய கருண் நாயர் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.