ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் போட்டியில், நேற்று டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தனது ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் கேப்டன் சுப்மன் கில்லுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, இந்த சீசனில் குஜராத் அணி செய்த முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடைசி ஓவரில் ஓவர் ரேட் குறைவாக இருந்ததால், உள்வட்டத்திற்கு வெளியே 5 வீரர்களுக்குப் பதிலாக 4 வீரர்கள் மட்டுமே நிற்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், கடைசி பந்து வரை சென்ற இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அபராதம் விதிக்கப்பட்டாலும், புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி தனது கணக்கைத் தொடங்கியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.