தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனாக் காலம் என்பதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடைபெற இருக்கிறது.
முதியோர்களை கொரோனா வைரஸ் எளிதாக தாக்கும் என்பதால் அவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், தபால் வாக்கு மூலம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.
அதன்படி 80 வயதிற்கு மேற்பட்டோரும், மாற்றித்திறனாளிகளும் விருப்பப்பட்டால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். அதற்கு முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்ததது.
தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்தது. அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தபால் வாக்கு பதிவு செய்தவர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் மார்ச் 29-ந்தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.