கிரிக்கெட்

Bat-இல் AI Chip பொறுத்தி விளையாடுகிறாரா வைபவ் சூரியவன்ஷி? - ஆய்வகத்துக்கு அனுப்ப கோரிக்கை

தற்போது ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி வருகிறார்.

கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் அவர் சதமடித்தார். தற்போது ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த யு19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.

சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் 15 வயது சிறுவனின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் நேர்த்தியாக உள்ளது குறித்து பலரிடத்தும் வியப்பு ஏற்படுவது இயல்பே.

சூர்யவன்ஷி தனது வயதை குறைத்து கூறுகிறாரா என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை, ஊக்கமருந்து சோதனை உள்ளிட்டவையும் எடுக்கப்பட்ட பின்னரே ஆட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழலில் 15 வயது சிறுவன் இவ்வளவு சிக்ஸர்களை விளாசுவது நம்ப முடியாததாக உள்ளது என்று தனது வியப்பை வெளிப்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நுமான் நியாஸ் சந்தேகம் ஒன்றையும் கிளப்பியுள்ளார்.

அதாவது, சூர்யவன்ஷி தனது பேட்டில் கூடுதல் சக்தியை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சிப் பயன்படுத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்ட நியாஸ், 16 வயதிலேயே இவ்வளவு நுட்பமான மற்றும் 360 டிகிரி கோணத்தில் ஆடும் திறமை வியப்பளிப்பதாக தெரிவித்தார்.

எனவே வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்துவதுபோல சூர்யவன்ஷியின் பேட்டை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதை நகைச்சுவையாக தெரிவித்தாலும் கூட, இந்த கருத்து இணையத்திலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகி வருகிறது.