கிரிக்கெட்

IPL 2026 | மழை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கை எளிதாக்கியது... தோல்விக்கு பின் சுப்மன் கில் கருத்து

கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை.

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் மழை பெய்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் ஆட சாதகமாக மாறியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இது 210-220 ரன்கள் எடுக்கக்கூடிய விக்கெட் போலத் தெரிந்தது. 175 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம், கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. பந்து பழையதாக ஆக ஆக, அதைத் தரையில் அடித்து ஆடுவது கடினமாக இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில், மழை தொடர்ந்து பெய்ததால் பந்து ஈரமாகி, பேட்டிங் செய்வதற்கான சூழல் சற்றே மேம்பட்டது. அதனால், இரண்டாவது இன்னிங்ஸில் பந்து அவ்வளவாக நின்றதாக நான் நினைக்கவில்லை. ஆனாலும், நாங்கள் நன்றாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன்.

துரதிர்ஷ்டமானது தான், இது எங்களுக்கு சாதகமான போட்டியாக அமையவில்லை, ஆனால் நாங்கள் ஓரளவுக்கு நன்றாக செய்தோம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து முன்னேறி, ஆட்டத்தின் தீவிரத்தை அதிகரித்து, உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்," என்றார்.