கிரிக்கெட்

IPL 2026 | மழையால் கைவிடப்பட்ட KKRvsPBKS போட்டி - ஏமாற்றத்தில் ரசிகர்கள்

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

2026 ஐ.பி.எல். தொடரில் 12-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

போட்டி தொடங்கியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கே.கே.ஆர். அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஃபின் ஆலென் 6 ரன்களில் பார்ட்லெட் வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் பார்ட்லெட் ஓவரிலேயே 4 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆட்டத்தின் 3 ஓவரின் போது மழை குறுக்கிட ஆரம்பித்தது. எனினும், ஓவரின் 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழை தீவிரமானது. இதனால் போட்டியை தொடர முடியாத சூழலில் தடைப்பட்டது. முதலில் பேட்டிங் தொடங்கிய கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை சேர்த்துள்ள சூழ்லையில், போட்டி மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மழை நின்ற பிறகு ஆடுகளத்தை சரி செய்யும் பணிகளில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். பிறகு களத்தில் உள்ள அம்பயர்களுடன் இரு அணி ேகப்டன்களும் பேசினர். இறுதியில் போட்டியை கைவிட இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்றைய போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது.