இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி தாங்கள் விளையாடிய மூன்று டி20 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தத் தோல்விகள் இந்திய அணிக்கு பல கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள பேட்டிங் பிரிவு திணறி வருகிறது.
முக்கிய ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பங்களிப்பு பந்துவீச்சில் குறையாக உள்ளது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் ஒரு விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த உடனேயே அணியின் செயல்பாடுகள், தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “விஷயம் மிகவும் எளிமையானது. இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில், இந்திய டி20 அணி ஒரு மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது.
தற்போது ஆண்கள் டி20 அணியின் செயல்திறனை பொறுத்தவரை ஒரு மோசமான காலகட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவென்பதை நாம் ஆராய வேண்டும்.
மேலும் தொடர் முடிந்தவுடன் ஒரு விரிவான ஆய்வின் மூலம், அதை சரிசெய்வதற்கு நிச்சயமாக முயல்வோம். ஜூலை 19 அன்று இங்கிலாந்தில் ஒருநாள் தொடர் முடிவடைந்தவுடன், இந்த ஆய்வு நடைபெறும்” என்று அவர் கூறினார்.