இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், சொந்த மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் காட்டமாக பேசி வீடியோவெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் ஜாலியாக இருப்பார்கள். கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளது. இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டத்தில் உள்ளோம். உடனடியாக கஷ்டமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன பிரச்சனை உள்ளது. இந்திய வீரர்களின் தரம் குறைவாக உள்ளதா? ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்களா? வேகம், ஸ்பின் இரண்டிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்கிறார்கள்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி இந்தாண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மொத்தமாகவே 14 ஓவர்களை மட்டும்தான் வீசி உள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்திய அணியால் இன்னமும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இந்த அளவிற்கு சரிவு ஏற்படும்" என்று பேசியுள்ளார்.
WTC டெஸ்ட் தொடரில் 65 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இந்தியாவின் 3 ஆம் வரிசை பேட்ஸ்மேனின் முதல் இன்னிங்சின் சராசரி 26 ஆகும். இது 2 ஆவது மோசமான உலக சாதனையாகும்.
ஆகவே இந்திய அணியின் 3 ஆம் வரிசை வீரர் யார் என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 3 ஆம் வரிசையில் இறங்கினார். கவுகாத்தி டெஸ்டில் சாய் சுதர்சன் 3 ஆம் வரிசையில் இறங்கினார். இது இந்தியாவிற்கு உதவியதா?
WTC டெஸ்ட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இலங்கை, நியூஸிலாந்துடன் அவே கேமில் 2 போட்டிகளும் ஆஸ்திரேலியாவுடன் ஹோமில் 5 போட்டிகளும் இந்தியா விளையாடுகிறது.
இந்தியா அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாட இன்னும் 7 மாதங்கள் உள்ளது. ஆனால் இப்போது இந்திய டெஸ்ட் அணியில் என்ன நடக்கிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
?Dinesh Karthik exposed Gautam Gambhir and Ajit Agarkar ?He said, "During the Ravi Shastri-Virat Kohli era, teams like Australia, England and others were afraid to tour India. But in the Gambhir era, no team fears us anymore. We need to take big decisions to save Indian Test… pic.twitter.com/oCPJ8gHSq5