கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை - ஐ.சி.சி. அர்ப்பணிப்பின் வெளிப்பாடு... ஜெய் ஷா

பிரம்மாண்ட விழாவில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 12 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர்.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரானது, கிரிக்கெட் விளையாட்டை அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக மாற்றுவதற்கான ஐ.சி.சி. முயற்சியின் வெளிப்பாடு என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தெரிவித்தார். ஐ.சி.சி.-இன் இந்த பிரம்மாண்டமான தொடர் வருகிற ஜூன் 12-ஆம் தேதி தொடங்கி ஜூலை 05-ஆம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது.

"இது மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு மைல்கல் தருணம். இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகவும் விறுவிறுப்பான மற்றும் லட்சியமிக்க ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடராக இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். இதைத் தொடங்கி வைப்பதற்கு இது ஒரு பொருத்தமான வழி.

இது, பர்மிங்காமில் ஜூன் 12-ஆம் தேதியன்று முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பு, போட்டிக்கான எதிர்பார்ப்புக்கு இறுதி உத்வேகத்தை அளித்து, நிகழ்வை சுற்றியுள்ள பரபரப்பையும் உற்சாகத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய விளையாட்டைக் கட்டமைக்கும் செயல்திட்டத்துடன் இணைந்த ஐ.சி.சி.இன் அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையின் மற்றுமொரு வெளிப்பாடே இந்த நிகழ்வு," என்று போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜெய் ஷா கூறினார்.

இங்கிலாந்தில் உள்ள வாட்டர்லூ பாலத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 12 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொண்டனர்.

தலைநகர், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், பிரிஸ்டல், சவுத்தாம்ப்டன் உள்ளிட்ட போட்டி நடைபெறும் நகரங்கள் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்களும் இளம் பங்கேற்பாளர்களும், விழாவின் போது தெரு கிரிக்கெட், ஊடாடும் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

2024-இல் தென் ஆப்பிரிக்கா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து, இத்தொடரின் நடப்பு சாம்பியனாக உள்ளது.

இந்தப் போட்டியின் வரலாற்றில் ஆறு பட்டங்களுடன் ஆஸ்திரேலியா மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. அதேவேளையில், கடந்த ஆண்டு 50 ஓவர் பிரிவில் வெற்றி பெற்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இம்முறை தனது முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.