கிரிக்கெட்

ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோ விவகாரம்: சுயநல நோக்கம்.. லலித் மோடி மீது ஹர்பஜன் பாய்ச்சல்

வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம்.

மாலை மலர்

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன்.

என்று ஹர்பஜன் சிங் கூறினார்.