நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி, தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், மீண்டும் இந்திய தேசிய அணிக்கு திரும்ப வேண்டும் என்று சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
முகமது ஷமி குறித்து கங்குலி கூறுகையில், "ஷமி பும்ராவுடன் இணைந்து பந்துவீச வேண்டும். வேறு எங்கும் அல்ல. அந்த அளவிற்கு அவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதை நாம் பார்த்தோம்.
35 வயதான ஷமி தற்போது முழு உடல் தகுதியுடன் உள்ளார். விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இன்னும் அதே பசியுடன் இருக்கிறார்.
கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய ஷமி, 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது அவரது மேட்ச் ஃபிட்னஸை நிரூபித்துள்ளது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, அனுபவம் வாய்ந்த ஷமியைப் புறக்கணிக்காமல், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருடன் இணைந்து ஷமியையும் அணியில் சேர்க்க வேண்டும்.
என்று கங்குலி கூறினார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் ஷமி, இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் தேசிய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.