இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
அதன் தொடர்ச்சியாக, இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சீவர் பிரண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய பெண்கள் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 83 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து தீப்தி சர்மா 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் நாட் சீவர் பிரண்ட் 44 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 52 ரன்னில் வெளியேறினார்.
இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர்.
இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 115 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட் 5 விக்கெட்டும், சயாலி சத்கரே, ஸ்நே ரனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.