துலீப் டிராபி போட்டியில் மத்திய மண்டல அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு மண்டலம் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
துலீப் டிராபி அரையிறுதி ஒன்றில் கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மத்திய மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரிங்கு சிங் 60 ரன்னும், ஆர்யன் ஜுயல் 46 ரன்னும் எடுத்தனர்.
கிழக்கு மண்டலம் சார்பில் முகேஷ் குமார், அபிஜித் சர்க்கார் தலா 3 விக்கெட்டும், ஷமி, குரேஷி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய கிழக்கு மண்டலம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ்
சூர்யவன்ஷி 92 ரன் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் 69 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மத்திய மண்டல அணி சார்பில் ஹர்ஷ் துபே 4 விக்கெட்டும், ஆர்யன் பாண்டே, யாஷ் தாகுர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய மத்திய மண்டல அணி 2வது இன்னிங்சில் 158 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அமன் மொகாடே 41 ரன் எடுத்தார். அர்ஷத் கான் 25 ரன்னும், ஹர்ஷ் துபே 24 ரன்னும் எடுத்தனர்.
கிழக்கு மண்டல அணி சார்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கிழக்கு மண்டல அணி களமிறங்கியது. வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிமன்யு ஈஸ்வரன் 24 ரன்னும், குமார் குஷாக்ரா 22 ரன்னும் எடுத்தனர்.
கேப்டன் இஷான் கிஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இறுதியில், கிழக்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
மத்திய மண்டல அணி சார்பில் ஹர்ஷ் துபே 4 விக்கெட் வீழ்த்தினார்.