கிரிக்கெட்

சச்சின், கோலியைவிட சிறந்த உயரத்தை எட்டுவார்: சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டெயின்

சூர்யவன்ஷியை வேகமான மற்றும் பவுன்ஸ் பந்துகள் மூலம் சோதிக்கலாம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் ஆரஞ்சு கேப் உள்பட 5 விருதுகளையும் கைப்பற்றினார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என புகழாரம் சூட்டினார்.

சூர்யவன்ஷி ஒரு தனி ரகம். தற்போது தென் ஆப்பிரிக்காவில் 14 அல்லது 15 வயதில் இவரைப் போன்ற திறமையான வீரர் யாரும் இல்லை. அவர் உண்மையிலேயே ஒரு அதிசயமான வீரர்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய ஜாம்பவான்களை விட, வைபவ் தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதியில் மிகப்பெரிய உயரத்தை எட்ட வாய்ப்புள்ளது.

இந்திய அணி நிர்வாகம் இவரைத் தொடக்கத்திலேயே மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் கையாள வேண்டும்.

அவரை சரியாக பாதுகாக்கவில்லை என்றால், அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும். அதிக பொறுப்புடன் கூடிய வெகுமதி இருக்கும் அதேவேளையில், கவனக்குறைவாக இருந்தால் திறமை வீணாகிவிடவும் வாய்ப்புள்ளது.

ககிசோ ரபாடா எப்படி தனது பந்துவீச்சால் தாக்குதல் நடத்துகிறாரோ, அதுபோல சூர்யவன்ஷியை வேகமான மற்றும் பவுன்ஸ் பந்துகள் மூலம் சோதிக்கலாம். அவர் இன்னும் சிறுவன் என்பதால், பவுன்சர் பந்துகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது முக்கியமானது என தெரிவித்தார்.