கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷிக்கு யார்க்கர் போட்டது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு - பேட் கம்மின்ஸ்

இந்த ஆண்டு ஹைதராபாத் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், சன்ரைசர்ஸ் அணியின் 2026 ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

நியூ சண்டிகரில் நேற்று நடந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பெளலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 243 என்ற இமாலய இலக்கை குவித்தது.

பின்னர் தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி, 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஐதாராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “வைபவ் சூர்யவன்ஷி நன்றாகவே விளையாடினார். இது மிகச்சிறந்த ஆடுகளம், ஆனால் வெற்றிக்கான வித்தியாசம் மிகக் குறைவு.

நீங்கள் உங்கள் யார்க்கரை சற்றே தவறவிட்டாலும், அவர் அதை தவற விடுவதில்லை. சேஸிங்கை தேர்ந்தெடுத்ததில் வருத்தம் ஒன்றும் இல்லை. இறுதியில் கூட அது மிகச்சிறந்த விக்கெட்டாகவே இருந்தது.

இளம் வீரர்களாக நாங்கள் ஒரு முழுமையான அணியாக உருவெடுத்துள்ளோம் என நினைக்கிறேன். பிரஃபுல் மற்றும் சாகிப் அருமையாக விளையாடினர்கள்.

இன்று நான் ஒரு புள்ளிவிவரத்தை பார்த்தேன். இந்த ஆண்டு இதுவரை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற இளம் அணிகளில் நாங்களும் ஒன்று. இது பயிற்சியாளர் குழு கண்டறிந்த திறமையை காட்டுகிறது.

தவறான நேரத்தில் ஓரிரு விக்கெட்டுகளை அதிகமாக இழந்தோம். ஆனாலும் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொண்டோம்.

முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கு நாங்கள் ஒரு சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டோம் என்று நினைக்கிறேன். வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர்.

இந்த ஆண்டு முழுவதும் அவர்களின் மனப்பான்மை, அவர்கள் விளையாடிய விதம், அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடியது போல் தெரிகிறது” என்று கூறினார்.